போபால்: தென்ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலி 5 குட்டிகளை ஈன்றது. இந்தியாவின் சட்டீஸ்கர் வனப்பகுதியில் வாழ்ந்து வந்த கடைசி சிவிங்கி புலி கடந்த 1947ம் ஆண்டு இறந்ததை தொடர்ந்து, இந்தியாவில் சிவிங்கி புலி இனம் அழிந்து விட்டதாக 1952ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவிங்கி புலிகள் இனத்தை மீண்டும் மீட்டெடுக்க ஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆப்பிரிக்கா நாடான நமீபியாவிலிருந்து சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய கடந்த 2022ம் ஆண்டு ஜுலை மாதம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 5 பெண் மற்றும் 3 ஆண் சிவிங்கி புலிகள், பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மத்தியபிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 7 ஆண், 5 பெண் சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டு குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன. இதில் காமினி என்ற 5 வயது பெண் சிவிங்கி புலி நேற்று 5 குட்டிகளை ஈன்றது.
The post தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பெண் சிவிங்கி புலி 5 குட்டிகளை ஈன்றது appeared first on Dinakaran.